வறட்சி பாதிப்பு: அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற வறட்சி பாதிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு மழை குறைந்துள்ளதால் போர்கால அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதி, அரசு நிவாரணம் வழங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட விவசாயங்களின் நிலத்தை ஆய்வு செய்து, துல்லியமாக கள பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும், இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் சேராத, விவசாயிகள் அனைவரும் விவசாய காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு தொடர்பான அறிக்கை ஜன. 9ஆம் தேதி அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார் பேசுகையில் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. பயிர் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை அதிகாரிகள் அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவரங்கள் சேகரிக்கும்போது, அவர்களின் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், தொலைபேசி எண்களை சேகரிக்க வேண்டும். இதேநிலை நீடித்தால், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் அதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ், உமா மகேஸ்வரி, சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் கே. ராஜாமணி, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com