சாத்தான்குளத்தில் இனிப்புக் கடையில் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்று பணம் திருடியதாக 4 சிறுவர்களைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் தச்சமொழி தெருவைச் சேர்ந்தவர் மா. கணேஷ்குமார் (38). இவர் சாத்தான்குளம் பிரதான சாலையில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றவர் சனிக்கிழமை காலையில் கடையைத் திறந்தாராம். அப்போது கடையின் ஓடுகளை பிரித்து மர்ம நபர்கள் இறங்கி, கல்லாபெட்டியில் இருந்த ரூ. 3000-ஐ திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கேமராவை இயக்கி பார்த்தபோது ஒரு சிறுவன் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ஹெச். செல்வக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.
சிசிடிவி கேமராவில் பதிவான படத்தைக் கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில் ஒரு சிறுவனைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 4 சிறுவர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஒருவரைத் தேடி வருகின்றனர்.