தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன. 9) மாலை முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் சி. பசுபதிபாண்டியனின் நினைவு தினம் தூத்துக்குடி அருகேயுள்ள அலங்காரத்தட்டு கிராமத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க, தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், தூத்துக்குடி மாவட்டத்திலும், பிற பகுதிகளில் இருந்தும் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் 5-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டுவருவதற்கும், கட்சி மற்றும் சமுதாயக் கொடிகள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை கொண்டுசெல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்குப் பொருந்தாது.
தடை உத்தரவு காலகட்டத்தில், வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும், இந்தத் தடை உத்தரவு, திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.