மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் ஏறத்தாழ 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிறுவர்கள் பிரிவில் ஸ்ரீவைகுண்டம் என். முருகன் முதலிடத்தையும், புதுக்கோட்டை காமராஜ் இரண்டாமிடத்தையும், தூத்துக்குடி அஜித்குமார் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயபாரதி முதலிடத்தையும், திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்புலட்சுமி இரண்டாவது இடத்தையும், செல்வி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில்குமார் முதலிடத்தையும், வீரவநல்லூர் ரூபன் டேனியல் இரண்டாமிடத்தையும், திருச்செந்தூர் ராஜபெருமாள் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ் பரிசுகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன், துறைமுக சபை உறுப்பினர்கள் செல்வராஜ், பொன் வெங்கடேஷ், செயலர் மோகன், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், நிதி ஆலோசகர் மற்றும் உயர்கணக்கு அதிகாரி சாந்தி, தலைமை பொறியாளர் சுரேஷ் படில், முதுநிலை துணை போக்குவரத்து மேலாளர் எடிசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.