தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை பழைய இரும்புக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியானதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டதாம். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, வீட்டுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியேறி வேறு இடத்துக்குச் சென்றனர். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர் கேஸ் எங்கிருந்து வெளியாகிறது என சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கேஸ் கசிவு ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்பு சேமித்து வைக்கும் கிட்டங்கியில் இருந்த ஒரு சிலிண்டரில் இருந்து வெளியானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அந்த சிலிண்டரில் இருந்து மேலும் கேஸ் வெளியாகாத வகையில் தடுத்தனர். இதனால், அந்தப் பகுதியில் ஏறத்தாழ 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இருப்பினும், அந்த பழைய இரும்பு கடையில் வேறு ஏதேனும் சிலிண்டர்கள் உள்ளனவா அந்த சிலிண்டர்களில் இருந்து வெளியான வாயு எந்த வகையைச் சேர்ந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.