தூத்துக்குடியில் திங்கள்கிழமை பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து 50 நாள்களாகியும் பிரச்னை தீரவில்லை எனக் கூறியும், பணம் செல்லாது அறிவிப்பு ரொக்கப் பண பரிவர்த்தனையை திசை திருப்பும் முயற்சி எனக் கூறி மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, மாவட்டச் செயலர் லோகநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் காசி விஸ்வநாதன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். நிர்வாகிகள் பரமசிவன், பாலசிங்கம், சேது, சுப்பிரமணியன், அசோகன், பாண்டியன், ராமையா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வங்கி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 35 பேரை கைது செய்தனர். இதனால், கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.