தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்குள் 1,706 பேருக்கு அரசின் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் தேர்வுக்குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் பயனாளிகளுக்கு டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 1,706 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளும், 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்களும் வழங்க அரசிடமிருந்து இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 8 கிராமங்களில் 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்தி, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கப்படும்.
கடந்த மாதத்தில் 13 கிராமங்களுக்கும், ஜனவரி மாதத்தில் 14 கிராமங்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 21 கிராமங்களுக்கும் என மொத்தம் 1,706 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கிராம சபை கூட்டத்தின்போது விலையில்லா கால்நடைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.