தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன், அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் வாயிற்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
13ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் ஊழியர்களுக்கான சீருடை மற்றும் தையல் கூலியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. கிளைச் செயலர் சிவகுமார் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சித்தநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலர் மாரிமுத்து, தலைவர் தவசிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், விருதுநகர் மண்டலத் தலைவர் வெள்ளத்துரை, திருநெல்வேலி மண்டல துணைத் தலைவர் கருப்பசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., ஜனதா தள ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.