தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம், சென்னை செம்மூதாய் பதிப்பகம் ஆகியவை இணைந்து, "தமிழ் இலக்கியங்களில் சமூக பொருளாதார அரசியலின் நிலை' என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சிக்கு, சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத் தலைவர் என்.ஆர். கோவிந்தன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் ரோஸ்லின் மேரி, செயலர் ஜெசி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைமை கண்காணிப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு நூல்களை வெளியிட்டார். நிகழ்ச்சியின்போது, சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் சார்பில் செம்மூதாய் சதாசிவத்துக்கு இலக்கிய வேந்தன் விருது வழங்கப்பட்டது.
செம்புலம் தமிழாராய்ச்சி காலண்டு இதழ் ஆசிரியர் செம்மூதாய் சதாசிவம், சிங்கப்பூர் கவிமாலை செயலர் சத்தியமூர்த்தி, துணைச் செயலர் தியாக ரமேஷ், கவிஞர் தங்கமணி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்டோர் தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அமலஅருள் அரசி, உதவி பேராசிரியர் அ.ம. சோனல், வரலாற்றுத் துறை தலைவர் மேரி ஹெப்சிபாய் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.