சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டியில் பள்ளி மாணவர் 1 கி.மீ. தொலைவுக்கு பின்னோக்கி ஸ்கேட்டிங் சென்று உலக சாதனை முயற்சியில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.
கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த வள்ளுவன்- மஞ்சுளா தம்பதியின் மகன் வாசு சுதன்(12). ஏற்காட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவரான இவர், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறமுள்ள திருமண மண்டபம் முன்பிருந்து செண்பகவல்லி அம்மன் கோயிலை சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு பின்னோக்கி ஸ்கேட்டிங்கில் சுற்றிவந்து, மீண்டும் திருமண மண்டபம் வந்தடைந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ், மாணவரின் ஸ்கேட்டிங் உலக சாதனை முயற்சியைத் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக ஆலோசகர் ராஜகோபால், தொழிலதிபர் அழகுராஜன், வழக்குரைஞர்கள் முருகானந்தம், கருப்பசாமி, யூனிவர்சல் புக் ஆப் ரெகார்ட் நடுவர் சுரேஷ்குமார், கிங் ரைசர் டிரஸ்ட் தலைவர் வெங்கடேசன், நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கச் செயலர் நீதிராஜன், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், மாணவர் வாசு சுதனைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
சரவணாஸ் ஆர்ட்ஸ் அண்டு பியூஷன் நிறுவனர் கிருஷ்ணரூபா வரவேற்றார். கிங் ரைசர் அறக்கட்டளை பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார்.