வைகுண்டம் பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இம்மாதம் 18ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என தாமிரவருணி அணை பாதுகாப்பு போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டக் குழுச் செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியில் நடைபெற்ற முறைகேடுகளால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புனரும் இணைந்து, ஜன. 18ஆம் தேதி கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.