தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 மாணவர் விடுதிகளையும் உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் சுரேஷ்பாண்டி, மாவட்டத் தலைவர் அமர்நாத் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட நிர்வாகிகள், மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள 5 மாணவர்கள் விடுதிகளையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி, சாத்தான்குளம், கடம்பூர், குறுக்குச்சாலை, நாகம்பட்டி ஆகிய 5 இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மாணவர் விடுதிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்குமான உணவுப் படியை அதிகரித்து வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொலைக்காட்சி பார்க்க தனி அறை அமைக்க வேண்டும் எனு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.