சாத்தான்குளம் அருகே பைக் மீது தனியார் சொகுசு பேருந்து திங்கள்கிழமை நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் க.கோகுல்ராஜ் (21). இவரும்,அவரது நண்பர் ஜெ. அருண்குமார் (21) ஆகிய இருவரும் பைக்கில் திங்கள்கிழமை மாலை திசையன்விளைக்கு சென்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு தனியார் கல்லூரி அருகில் வரும் போது திசையன்விளையில் இருந்து சென்னை சென்ற தனியார் சொகுசு பேருந்து பைக் மீது மோதியதில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கோகுல்ராஜ் உயிரிழந்தார். அருண்குமார் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இரவில் இறந்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.