சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூரில் உள்ள தோட்டத்தின் கிணற்றில் பெண் ஒருவர் விழுந்து தத்தளிப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. நிலைய அலுவலர் உ. ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். அப்போது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பெண்ணை கயிறு மூலம் கிணற்றில் இறங்கி மீட்டனர்.
விசாரணையில் அவர் கொழுந்தட்டைச் சேர்ந்த சந்தனதிரவியம் மனைவி ஆனந்தாச்சி (50) என தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பெண் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.