திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் தை மாதம் உத்திர நட்சத்திரத்தில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டார். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
நிகழாண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காலை 9.05 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாசலபதிக்கு ஒரே நேரத்திலும், தொடர்ந்து வள்ளி, தெய்வானைக்கும் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் அம்பாளுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.