தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு 403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நிகழாண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்-மாணவிகளுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.