கோவில்பட்டியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுருட்டுலிங்கம் (29). ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் புறவழிச் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.
அப்போது புறவழிச்சாலை அணுகுசாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூருக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ கவிழ்ந்ததில் லோகநாயகி (70), நித்தியகல்யாணி (64) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த ஆவுடையப்பன் (45) தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டரை(39) கைது செய்தனர்.