திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், காயல்பட்டினம் நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் ஆகியன சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் அஹ்மத் ரம்ஸீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். எம்.என்.அஹ்மத் ஸாஹிப் வரவேற்றார். எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பாஸ்கரன் உள்பட பலர் பேசினர்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் கொடியசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தார்.
தலைக்கவசம் அணிந்தவர்கள் இருசக்கர வாகனங்களிலும், மாணவர்கள் நடந்தும் பேரணியாக சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று தொடங்கிய இடத்திலேயே நிறைவுபெற்றது.