பகத்சிங் மன்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் மூக்கையா, ஒன்றியத் தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் உத்தண்டராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கிராமத்தில் உள்ள குளம், கண்மாய், நீர்வரத்து ஓடைக்கு இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆண்டுதோறும் விவசாயம் செய்யும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். நிலம் இல்லாத கூலி விவசாயிகளுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், மன்ற நிர்வாகிகள் லட்சுமணன், ஜீவானந்தம், சின்னச்சாமி, ரமேஷ்கண்ணா, செல்வம், கணபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.