தீப்பெட்டித் தொழிலாளர்கள் சார்பில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மருதம் மா. மாரியப்பன் தலைமை வகித்தார். தீப்பெட்டித் தொழிலாளி ஜெயபாக்கியம் முன்னிலை வகித்தார். தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். தீப்பெட்டி பண்டல்களின் விலை அதிகரித்து 5 ஆண்டுகள் ஆகியும் தொழிலாளர்களுக்கான கூலியை உயர்த்தாததைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.
பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன், தமமுக மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மு. ரவிகுமார், பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன், பாமக மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். இதில், தீப்பெட்டித் தொழிலாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.