திருச்செந்தூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் புதன்கிழமை காலையில் போராட்டத்தை தொடங்கிய மாணவர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே... பத்மநாபமங்கலம் குமரகுருபரர் சுவாமிகள் கலை கல்லூரி மாணவர், மாணவிகள் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் பல்வேறு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணிச் செயலர் சுரேஷ், நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க அணி மாநிலச் செயலர் வியனரசு, திமுக மேற்கு ஒன்றியச் செயலர் வைகுண்டபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. ஆர். எம்.பி ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை மாணவர், மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை காஞ்சி சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் சங்கத்தினர்: சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வட்டக் கிளைத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார்.
இதில் வட்டச் செயலர் பொன்சேகர், சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டக் கிளைத் தலைவர் அந்தோணி தமிழ்ச்செல்வன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட இணைச் செயலர் சித்ரா, அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலர் கு. ஜெயபால், சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். வருவாய்த் துறையைச் சேர்ந்த சுல்தான் சலாவூதின் நன்றி கூறினார்.
நாசரேத்தில்... நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்கள் 2ஆம் நாளாக கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி நகரத் தலைவர் விஜய்ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.