நாசரேத் அருகே பெண்ணிடம் நகையைத் திருடியதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உடையார்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி விஜயசுந்தரி( 32). இவர் கடந்த 6ஆம் தேதி வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுபோனதாம். இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் தலைமையில் போலீஸார் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளமடம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் உடையார்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ரா. முத்துக்குமார் என்ற மூக்காண்டி (27) எனவும், விஜயசுந்தரி வீடு புகுந்து நகையைத் திருடியவர் என்பதும் தெரியவந்ததாம். அதன்பேரில் போலீஸார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.