சீரான குடிநீர் விநியோகம் கோரி, ஆறுமுகனேரியில் பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சிஅலுவலகம் முன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆறுமுகனேரி தேர்வு நிலை பேரூராட்சி 6ஆவது வார்டு பாரதி நகர் மேலத் தெரு மக்களுக்கு கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். பக்கத்துத் தெருக் குழாயிலும் இப்பகுதியினரை தண்ணீர் பிடிக்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 30 பெண்கள் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு நிர்வாக அதிகாரி இல்லாததால் அலுவலகம் முன் ஆறுமுகனேரி-காயல்பட்டினம் நெடுஞ்சாலையில் அமர்ந்து நண்பகல் 12 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆறுமுகனேரி போலீஸார், அவர்களிடம் சென்று பேச்சு நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர், நண்பகல் 12.30 மணியளவில் நிர்வாக அதிகாரி குற்றாலிங்கம் வந்து, குடிநீர் கிடைக்க ஆவன செய்வதாக பெண்களிடம் கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.