ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருவர் ஏறி நின்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள சுமார் 140 அடி உயர காவல் தகவல் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருவர் ஏறி நிற்பதாக வருவாய் ஆய்வாளர் அப்பனசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
அதையடுத்து, டி.எஸ்.பி. முருகவேல்,கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் மற்றும் தீயணைப்புப் படையினர் நேரில் சென்றனர்.
அங்கு செல்லிடப்பேசி கோபுர உச்சியில் கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா (18) மற்றும் பாரதி நகரைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் சமையல் மாஸ்டர் காளைப்பாண்டியன்(22) ஆகியோர் நின்றனர். அவர்களிடம் ஒலிபெருக்கி மற்றும் செல்லிடப்பேசி வாயிலாக இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலர் சுரேஷ்பாண்டியன் மற்றும் காவல் ஆய்வாளர் பவுல்ராஜ் ஆகியோர் பேச்சு நடத்தி இருவரையம் கீழே இறங்கச் செய்தனர்.