தூத்துக்குடியில் விதிமுறையை மீறியதாக இரண்டு தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனி சந்திப்பு பகுதியில் பேருந்துகளை நிறுத்த அனுமதி இல்லாத நிலையிலும், சில தனியார் பேருந்துகள் அங்கு நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் ஆசிரியர் காலனி சந்திப்பு பகுதியில் நிறுத்தப்படும் பேருந்துகளை கண்காணிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த தனியார் பேருந்து விதிமுறையை மீறி ஆசிரியர் காலனி சந்திப்பில் நிறுத்தியதால் அப்பேருந்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல், நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் வேறு வழித்தடத்தில் சென்ற ஒரு சிற்றுந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.