பருவமழை பொய்த்ததையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பெண் விவசாயி சனிக்கிழமை இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளம் மேலக் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ருக்மணி(42). இத்தம்பதி மற்றும் மகன் சமுத்திரராஜ் ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய 5 ஏக்கர் நிலத்துடன், 41 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது நிலத்தைப் பார்வையிட்டு வந்த ருக்மணி தனது நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் பருவமழை பொய்த்ததால் கருகிவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட இழப்பை எப்படி சரி செய்வது எனவும் வீட்டில் வந்து கூறிக் கொண்டிருந்தாராம்.
இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.