மழை வேண்டி தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யாத நிலையில், தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், மழை பெய்ய வேண்டி தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ஜாமியா பள்ளி வாசல் இமாம் சேக் உஸ்மான் தலைமையில் இமாம் அப்துல் அலிம் சிறப்புத் தொழுகை நடத்தினார். இதில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மழை வேண்டி சிறப்பு துவா செய்தனர்.