குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு எல்லா நாள்களிலும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் பூஜை செய்ய பூசாரி சென்றபோது, கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மூலஸ்தானத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையிலான போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.
கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீஸார் இயக்கிப் பார்த்தபோது, அதில் இரு நபர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கேமராவில் பதிவான உருவங்களைக் கண்டு அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.