கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் தேசிய இளையோர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர் தலைமை வகித்தார். மருத்துவர் பிரபு, இலக்கிய குரிசல் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கடம்பூர் செ. ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழா சிறப்பு மலரை வெளியிட, அதனை இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சிறந்த நாவலாசிரியர் தர்மன், சிறார் நூலாசிரியர் உதயசங்கர், கிடாரி திரைப்பட இயக்குநர் பிரகாஷ் முருகேசன், புலரட்டும் புதுவிடியல் நூலாசிரியர் கணேசன் ஆகியோரை அமைச்சர் கெளரவித்தார்.
பின்னர், கல்வி, கலை, இலக்கியம், சேவை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதித்த மாணவ, மாணவியர் 78 பேருக்கு இலக்கிய உலாவின் விவேகானந்தர் சுடர் பட்டயம் வழங்கப்பட்டது. வண்ணம் தீட்டும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், அழகப்பாபுரம் கிராமத்துக்கு 100 மரக்கன்றுகள் மற்றும் பாண்டவர்மங்கலம் பெதஸ்தா மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்றார். விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பிரபு நன்றி கூறினார்.