மாணவர்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறைக்கு நல்லகண்ணு கண்டனம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை கண்டனத்துக்குரியது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம், வரலாற்று சிறப்பு மிக்கது. அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது வரவேற்கக் கூடியது. இந்நிலையில் மாணவர்களின் பொறுமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசும், காவல்துறையும் அடக்குமுறையை கைவிட்டு, அமைதியான அணுகுமுறையை கையாள வேண்டும். 6 நாள்களாக எந்தவித வன்முறையுமின்றி மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு மதிப்பு அளிக்காமல் காவல்துறையினர் அடக்குமுறையை கையாளுவது கண்டனத்திற்க்குரியது. ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டம், சட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். மத்திய அரசும் அதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.