ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் பரமராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும்,கோவில்பட்டி தனிக் குடிநீர் திட்டப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இளையரசனேந்தல் சுரங்கப் பாதை அருகே இருபுறமும் உடனடியாக அணுகுசாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தினர் கோஷமிட்டனர். கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில்,கட்சியின் நகர துணைச் செயலர்கள் சங்கரப்பன்,முனியசாமி, சரோஜா, அலாவுதீன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் ஜோசப், முத்துப்பாண்டி, செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.