சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சவூதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டாண்டு பணி அனுபவத்துடன் 30 வயதுக்குள்பட்ட பிஎஸ்சி மற்றும் எம்எஸ்சி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு தில்லியில் ஜனவரி 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும், கொச்சியில் ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் எம்எஸ்சி செவிலியர்களுக்கு ரூ.95,000- முதல் அனுபவத்துக்கேற்றவாறு அதிகபட்சமாக ரூ.1,10,000-மும், பிஎஸ்சி செவிலியர்களுக்கு ரூ.84,000 முதல் ஒரு லட்சம் வரையும் மாத ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாள்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ள செவிலியர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு 044-22505886 மற்றும் 22502267 என்ற தொலைபேசி எண்களிலும், www.omcmanpower.com என்ற இணையதள முகவரியிலும் அறிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.