குரும்பூரில் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அந்நிய செலாவணி ஈட்டித்தருவதிலும் முக்கியப் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக தொடங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட தொழில் மையம், நபார்டு வங்கி மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு மையம் ஆகியன இணைந்து நடத்தும் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம் குரும்பூர் ஞானம் மஹாலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தி புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு வங்கிகள் வழியாக தொழிற் கடன்கள் பெறுவதற்கான அரசுத் திட்டங்கள், மானிய உதவிகள் குறித்தும், தொழில்சார் அரசு நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலில் முன்னேற்றம் அடைந்தவர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், சிட்கோ அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டு தொழில் கடன் பெறுவதற்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
எனவே, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள், தொழில் முனைவோர், தொழில் ஆர்வலர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0461 - 2375345 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.