தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்திதிறன் கொண்ட 5 அலகுகள் (யூனிட்) மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து அலகுகளும் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்துவிட்டதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, 3 ஆவது அலகில் உள்ள கொதிகலனில் புதன்கிழமை அதிகாலை பழுது ஏற்பட்டதால் அந்த அலகின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் அனல் மின் நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே, 45 நாள் பராமரிப்பு பணிக்காக 2 ஆவது அலகில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து: இதற்கிடையே "யார்டு சுவிட்ச்' என்ற பகுதியில் புதன்கிழமை இரவு 11.20 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 1, 4, 5 ஆகிய அலகுகளிலும் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வியாழக்கிழமை முதல் மின் உற்பத்தியைச் சீராக்க பொறியாளர்கள் பணிகளைத் துரிதமாகச் செய்து வருகிறார்கள்.