கழுகுமலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி கீழத் தெருவைச் சேர்ந்த சண்முகையா மகன் குருசாமி(52). இவரது மகன் அங்கையாபாண்டியன் (23). வெளிநாட்டில் இருந்துவந்த இவர், பொங்கல் திருநாளையொட்டி ஊருக்கு வந்திருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர் சுடலைமுத்துவின் பைக்கில் கழுகுமலைக்கு சென்றுகொண்டிருந்தாராம்.
காளாங்கரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பைக் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அங்கையாபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த கழுகுமலை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.