கயத்தாறு அருகே அரசு மதுபானக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையின் மேற்பார்வையாளராக ஆத்திகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கடற்கரை மகன் இசக்கிமுத்து, விற்பனையாளர்களாக குமாரகிரியைச் சேர்ந்த தங்கவேல் மகன் சுப்புராஜ், பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் பூலையாபாண்டியன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை இரவு வழக்கம் போல இவர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை விடுமுறை என்பதால் கடை திறக்கவில்லை.
இந்நிலையில், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் முன்பகுதியில் மதுபாட்டில்கள் சிதறிக் கிடப்பதாக மேற்பார்வையாளர் இசக்கிமுத்துவுக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்து மதுபாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவர் கயத்தாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வந்து பார்வையிட்டு, ரேகைகளை பதிவு செய்தனர். கடையில் இருந்த சுமார் ரூ.80ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போயிருப்பதாக இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.