தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறகுப்பந்து போட்டியில், திருச்செந்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
கேலோ இந்தியா சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர் சுரேந்தர், 11ஆம் வகுப்பு மாணவர் சுதன் ஆகியோர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். மாணவர் சுரேந்தர் ஒற்றையர் பிரிவிலும் முதலிடம் பெற்றார். மாணவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு அணி வீரர்கள் தேர்வில் இவர்கள் கலந்துகொள்கின்றனர். இப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் சிவவிக்னேஸ்வரன், தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் அகில இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்திய அகில இந்திய ஜூனியர் கபடிப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்துகொண்டு விளையாடினார். சாதனை படைத்த இம்மூன்று மாணவர்களுக்கும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். அப்போது, பள்ளி உடற்கல்வி இயக்குநர் வசந்தா, உடற்கல்வி ஆசிரியர் ராஜபெருமாள், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் மா.சுரேஷ், ஒன்றிய திமுக செயலர் செங்குழி ஏ.பி.ரமேஷ், நகரச் செயலர் பெ.மந்திரமூர்த்தி, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சு.கோமதிநாயகம், வழக்குரைஞர்கள் சாத்ராக், கிருபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.