மழை வேண்டியும், தை அமாவாசையை முன்னிட்டும் தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் வெள்ளிக்கிழமை 20,007 எலுமிச்சை பழ யாகம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்ரீ சித்தர்நகரில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு மகா யாகத்துக்கான வழிபாடுகள் சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், முற்பகல் 11 மணிக்கு 20,007 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.