கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான விநாடி-வினா போட்டியில், நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரி முதலிடத்தை வென்றது.
கோயம்புத்தூர் லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், ஜி.கே.தேவராஜுலு நினைவு 24ஆவது விநாடி-வினா போட்டி இக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில், 35 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டியில் நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரி மாணவர்கள் பிரபாகர், சுந்தர் ஜெயந்த் ஆகியோர் முதலிடமும், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் கோவர்த்தனா, ஜெபாஸ் இம்மானுவேல் 2ஆம் இடத்தையும், விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி மாணவிகள் நந்தினி, ராஜலட்சுமி 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலர் செல்வராஜ், முதலிடத்தில் வென்றோருக்கு தலா ரூ.2ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், 2ஆம் இடத்தில் வென்றோருக்கு தலா ரூ.1,500, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில், கல்லூரி முதல்வர் (பொ) ஆதிலட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரியின் மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியர் சங்கர்கணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை ஆயத்த ஆடை பிரிவு உதவிப் பேராசிரியை சந்தானலட்சுமி தொகுத்து வழங்கினார். தகவல் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியை வீரலட்சுமி வரவேற்றார். கணினித் துறை உதவிப் பேராசிரியரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஜெயபாரதி நன்றி கூறினார்.