கோவில்பட்டியில் ஈஷா யோக மையம் சார்பில், ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் சனிக்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சுமார் 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிவன் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஈஷா யோக மையம் சார்பில் ஆதியோகி சிவன் ரதம் கோயம்புத்தூரில் இம்மாதம் 5ஆம் தேதி புறப்பட்டது. இந்த ரதம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டி நகருக்கு வந்தது.
கோவில்பட்டி தெற்கு பஜாரில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை இந்த ரதம் தெற்கு பஜாரிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விருதுநகர் மாவட்டம், சாத்தூருக்கு புறப்பட்டது.
இந்த ரத ஊர்வலத்தை டி.எஸ்.பி. முருகவேல் தொடங்கிவைத்தார். இதில், கோவில்பட்டி ஈஷா யோக மைய நிர்வாகிகள், அன்பர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.