கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சங்கரன்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.  புளியங்குடியை அடுத்த சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்த முத்துகுருநாதன் (27) பேருந்தை ஓட்டினார். சிவகிரியைச் சேர்ந்த ஹக்கீம் (44) நடத்துநராக இருந்தார். பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து கோவில்பட்டியை அடுத்த கருங்காலிப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் முத்துகுருநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நடத்துநர் ஹக்கிம், பயணிகளான கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி மலையரசன் மகன் மலைபிரகாஷ் (17), எட்டயபுரம் லட்சுமி (35), குருசாமி (66) ஆகியோர் காயமடைந்தனர். டி.எஸ்.பி. முருகவேல் மற்றும் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் தொழிலாளி பலி: கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகையா (58). இவர், தன் உறவினரான மாரியப்பன் (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இடைசெவல் கிராமத்துக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தோணுகால் விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சண்முகையா பலத்த காயமடைந்தார். மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com