தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாதெமி சார்பில் மாவட்ட தமிழ்வழிக் கல்வி பயிலும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான மினி மாரத்தான், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு வடபாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.
மாரத்தான் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர், மாணவிகளுக்கு 2 கிராம் தங்க நாணயம், இரண்டாமிடங்களை பிடித்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாமிடத்தை பிடித்தவர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம், மூன்றாமிடத்தை பிடித்தவர்களுக்கு 250 மி.கி. தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை சார் பதிவாளர் முத்துசாமி, அகாதெமி நிர்வாக இயக்குநர் பேச்சிமுத்து, மதுரை கணேசா ஸ்டோர் குழுமத் தலைவர் மு.மோகன், அகாதெமி முதல்வர் ஆ. சகானா தர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.