தொழுநோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக தொழுநோய் ஒழிப்பு தின விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில், 1999 ஆம் ஆண்டு மொத்த தொழுநோயாளிகள் எண்ணிக்கை 1,372 ஆக இருந்தது. 2016இல் 96 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 1,25,785 ஆகவும், தமிழகத்தில் 4,925 ஆகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் 96 ஆகவும் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். தொடர்ந்து நடைபெற்று வரும் சிகிச்சை பணியிலும் தொழு நோயாளிகளை கண்டறியும் பணியிலும் அரசும், அரசுப் பணியாளர்களும் தங்களை ஈடுபடுத்தி கொண்டதன் விளைவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உதாசினப்படுத்தாமல் மற்றவர்களைப் போல் அன்பாகவும் நமது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் மரியாதையுடன் நடத்தி தொழுநோய் இல்லாத நாட்டை உருவாக்கிட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர், மாணவிகள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், ஆய்வுக்கூட நுட்புனர் பயிற்சி மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியின்போது கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் பொ. சாந்தகுமார், தொழுநோய் ஒழிப்புத் திட்ட துணை இயக்குநர் யமுனா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பா. பானு, துணை இயக்குநர்கள் மதுசூதனன், போஸ்கோ ராஜா, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.