விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 6 பேர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
சிவகாசியையடுத்த பள்ளப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கப்பாண்டி(34). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 14ஆம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தேவராஜ் காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது அவரை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தங்கப்பாண்டியைக் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பள்ளப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் மாரிசெல்வம் என்ற சப்பட்டை(32), அவரது சகோதரர் சுப்புராஜ் (29) மற்றும் கீழத்தாயில்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் ஆனந்தராஜ் என்ற புலி (29), சிவகாசி நாராயணபுரம் சாலை முருகன் காலனியைச் சேர்ந்த ரத்தினம் மகன் கணேசன் (35), அதே பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் மனோகரன் (30), சிவகாசி ஜமீன்சல்வார்ப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் வீரஈஸ்வரன் (26) ஆகியோர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசுதாகர், 6 பேரையும் இம்மாதம் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.