தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது 21 பேருக்கு ரூ. 4.22 லட்சத்துக்கான நல உதவிகளை மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி 2016-2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஆதரவை பல்வேறு சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்காகவும், கல்வி பயிலும் 8 குழந்தைகளுக்கு தலா ரூ.12 ஆயிரமும், 8 குழந்தைகளுக்கு ரூ.18 ஆயிரமும் என மொத்தம் ரூ.2.40 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் 28.9.2015 அன்று கிணற்றில் தவறி விழுந்து இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் ஆட்சியர் என். வெங்கடேஷ் வழங்கினார்.
இதேபோல, கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி சவூதி அரேபியாவில் இறந்ததைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ. 82,486 அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் (பயிற்சி) எஸ். சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா. ராஜையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி. நவாஸ்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.