தூத்துக்குடியில் இரு பெண்களிடம் நகைப் பறிப்பு

தூத்துக்குடியில் வீட்டில் இருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை 7 பவுன் நகையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் வீட்டில் இருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை 7 பவுன் நகையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள செயின்ட் மேரீஸ் காலனியைச் சேர்ந்தவர் தொன்போஸ்கோ.  இவர் ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர்.  இவரது மனைவி ஜேசுஅம்மாள் (51).  இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினராம்.
 அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த ஜேசு அம்மாளின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
மேலும் வெளியே செல்லும் போது அந்த நபர் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.
 ஜேசுஅம்மாள் கூச்சல் எழுப்பியதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதவை திறந்து அவர்களை மீட்டனர்.  இந்த நகைப் பறிப்பு சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 பவுன் நகை திருட்டு: தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (60).  இவர், பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார்.
 கூட்ட நெரிசலை பயன்படுத்தி வள்ளியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்துச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com