ஆத்தூர் அருகே புன்னைக்காயலில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் ஸ்போர்டிங் கிளப் அணி அமரர் மனுவேல் பிஞ்ஞேயிரா நினைவு சுழற்கோப்பையை கைப்பற்றியது.
புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத்தின் சார்பில் அமரர் மனுவேல் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக் கான 44ஆவது மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டி கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினம் காயல் ஸ்போர்டிங் கிளப் அணியும், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணியும் மோதின. இரு அணிகளும் முழுநேர முடிவில் கோல் எதுவும் போடாததால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், காயல் ஸ்போர்டிங் கிளப் அணி 4-2 எண்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, தூத்துக்குடி மீன் வளத்துறை துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் கணேச நேரு தலைமை வகித்தார். பெனிஸ்டன் முன்னிலை வகித்தார். விழாவில், புன்னைக்காயல் பங்குத்தந்தை கிஷோக் அடிகளார், துணை பங்குத் தந்தை வினிஸ்டன் அடிகளார், ஊர்த் தலைவர் ஜோசப், துறைமுக கமிட்டித் தலைவர் பிச்சை, விமல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த வீரர்களுக்கான பரிசுகள் அசாருதீன், அஸ்கர், இருதயராஜ், நிக்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. புனிதஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரொங்காலி சில்வா நன்றி கூறினார். ஏற்பாடுகளை புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத்தினர் செய்திருந்தனர்.