தூத்துக்குடி மாவட்டத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தூய்மையான மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மாற்றிட அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் அதற்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தூய்மையான தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கிட, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகள், சுகாதார விழிப்புணர்வு குறித்து பத்து கட்டளைகள் அடங்கிய விளம்பர பலகைகளை அங்கன்வாடி மையம், பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளிடம் அவர்களின் வீடுகளில் கழிவறை வசதி அமைக்க வலியுறுத்த வேண்டும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக உருவாக்க அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே. பிச்சை, பயிற்சி ஆட்சியர் எஸ்.சரவணன், செயற்பொறியாளர் முருகன், தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.