காயல்பட்டினத்தில் பைக் மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
ஆறுமுகனேரி அருகிலுள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த வளன் அரசு மகன் பிபாகரன்(26). கட்டட தொழிலாளியான இவரும், இவரது நண்பர்களும் பைக்கில் திருச்செந்தூருக்கு சென்று விட்டு , காயல்பட்டினத்துக்கு சென்ற போது, அங்குள்ள தனியார் கல்லூரி அருகில் இவரது பைக் கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு , காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தார். காரில் இருந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது ரபீக் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.