தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புதன்கிழமை (ஜூலை 26) முதல் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் பத்தாம் வகுப்பில் 24 ஆயிரத்து 361 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிக் கல்வித் துறையினரால் அந்தந்த பள்ளிகளில் புதன்கிழமை (ஜூலை 26) முதல் வழங்கப்பட உள்ளது.
மாணவ, மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணையதள முகவரியில் ( WWW.TNVELAIVAAIPPU.GOV.IN ) தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே பதிவு செய்துகொள்ளலாம். இதற்காக பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து தகுந்த முன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லிடைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் சாதிச் சான்றிதழை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் தங்களது குடும்ப அட்டையில், பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.